மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தில் தலைவரை ஒருமையில் பேசிய உறுப்பினர்

திமுக மாவட்ட ஊராட்சி தலைவியை ஒருமையில் பேசி, மோதல் ஏற்பட்டதையடுத்து காவல்துறை பாதுகாப்பில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-11 11:15 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஊராட்சி கூட்டம் ஊராட்சி செயளர் (பொருப்பு) ருக்குமணி தலைமையில், மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ் செல்வி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 6 வது வார்டு உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளர்கள் கூட்டரங்கில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் பொருள் குறித்து விவாதிக்காமல் உறுப்பினர் கனிமொழி தனிப்பட்ட பிரச்சனை குறித்து மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வியுடன் சண்டையில் ஈடுபட்டார்.

இதில் உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஊராட்சி தலைவியை ஒருமையில் பேசியதுடன், சக திமுக உறுப்பினர்களையும் அவர்கள் தரக்குறைவாக பேசி, தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். மேலும் கூட்டத்தை நடக்கவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் கூட்டத்திற்கு தொடர்பற்ற அவர்களை அப்புறபடுத்தி, காவல்துறை பாதுகாப்புடன் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ் செல்வி கூறியதாவது, உறுப்பினர் கனிமொழி மாவட்ட ஊராட்சி தலைவி போட்டிக்கு என்னுடன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன் காரணமாக ஒவ்வொரு கூட்டத்தையும் நடக்கவிடாமல் மோதல் போக்கில் ஈடுபடுவதுடன் மக்களுக்கான நலன்களை சென்றடையவிடாமல் முட்டுகட்டையாக செயல்படுகிறார். இதன் உச்சமாக மிரட்டும் விதமாக ஆதரவாளர்களுடன் இன்று ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே இது தொடர்பாக கட்சியின் தலைமைக்கும், காவல்துறைக்கும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

(மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடதக்கது)

Tags:    

Similar News