சுதந்திர தின விழாவில் தியாகிகளை கௌரவிக்காத தென்காசி மாவட்ட நிர்வாகம்

தென்காசி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தியாகிகளை மாவட்ட நிர்வாகம் சரிவர கௌரவிக்காதது அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Update: 2021-08-16 04:45 GMT

மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பும் தியாகி லட்சுமி காந்தன்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பாக 75வது சுதந்திர தின விழா தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கொரானா கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டார். இதில் தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனணி செளந்தர்யா, கோட்டாட்சியர் ராமசந்திரன், சுதந்தர போராட்ட தியாகியும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான லட்சுமி காந்தன் பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொரானா காலம் என்பதால் வழக்கமான உற்சாகம் குறைந்து காணப்பட்டாலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்குவது உட்பட பல நிகழ்ச்சிகள் நடந்தது.

சுதந்திர போராட்ட தியாகிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கெளரவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த போதிலும் இது குறித்து சுதந்தர போராட்ட தியாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படாததால் தென்காசி மாவட்டத்தில் மூத்த சுதந்திர போராட்ட தியாகியும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் லட்சுமி காந்தன பாரதி மேடைக்கு அழைக்கப்படாமல் மேடையின் அருகே ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்.

அவரை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் தென்காசி அதிமுக நகர செயலாளர் ஷமீம் உட்பட பலர் மேடையை அலங்கரிக்க சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் லட்சுமி காந்தன் பாரதியை மேடைக்கு அழைக்காதது பலரை முகம் சுளிக்க வைத்தது. மாவட்ட ஆட்சியரும் இது குறித்து பொருட்படுத்தாமல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை பெற்றுக்கொண்டு தியாகிகளை கௌரவிப்பு செய்யாமல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து தியாகி லட்சுமிகாந்தன் பாரதி மேடைக்கு அருகில் சென்று என்ன இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கலெக்டரிடம்  கேள்வி எழுப்ப அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் தனது அலுவலர்களிடம் சால்வை கேட்க உங்களது சால்வைக்காக நான் வரவில்லை என்று தியாகி லட்சுமி காந்தன் பாரதி வேதனையடைந்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அவரது அருகில் வந்து வருத்தம் தெரிவித்து பின்னர் அவரை கவுரவித்தார்.

75வது சுதந்திர தின விழாவில் தியாகிகளை உரிய முறையில் கௌரவிக்காத சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News