குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

வெள்ளப் பெருக்கு குறைந்ததையடுத்து, குற்றால அருவிகளில் குளிக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-26 07:12 GMT

குற்றால பிரதான அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளிப்பதை படத்தில் காணலாம்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், வடகரை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையம், ஆகிய பகுதிகளில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் குற்றால அருவியில் தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை தடை விதித்தது.


இன்று காலை முதலே நகர் பகுதியில் மழை இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மெல்லிய சாரல் மழை பெய்வதால் தண்ணீர் அதிகரிக்க கூடும் என்று இன்றும் குளிக்க தடை விதித்திருந்தனர். இந்த சூழலில் குற்றாலம் பிரதான அருவிகளில் பாதுகாப்பு வளையத்தில் உள்ளே தண்ணீர் கொட்டுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சுற்றுலா பயணிகள் மற்றும் ஐப்ப பக்தர்களை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மீண்டும் மழை பெய்தால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்ற காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். 

Similar News