குற்றால அருவிகளில் இரண்டு நாட்களுக்குப்பின் குளிக்க அனுமதி

குற்றால அருவியில் இரண்டு நாள் தடைக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2023-11-04 06:13 GMT

குற்றாலம் பிரதான அருவியில் ஆனந்த குளியலில் சுற்றுலா பயணிகள்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஐந்தருவி, சிற்றருவி, குற்றாலம் பிரதான அருவி, புலி அருவி, பழைய குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளிக்க அனுமதியில்லாத செண்பகாதேவி அருவி மற்றும் தேனருவி என்ன அறிவுகளின் நகரமாக திகழ்கின்றது குற்றாலம்.

இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இந்த காலநிலையில் எங்கு உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதமான தென்றல் காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெள்ளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் பருவ நிலை காலங்களில் அருவிகளில் போதிய தண்ணீர் விழவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தென்காசி,குற்றாலம்,கடையம், கடையநல்லூர், புளியங்குடி மற்றும் சிவகிரி ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக  குளிக்க தடை விதித்தனர். 

இந்த சூழ்நிலையில் இன்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியது.

பாதுகாப்பு வளையத்திற்குள் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவி, சிற்றருவி, குற்றாலம் பிரதான அருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக கொட்டுகிறது. இதமான கால சூழ்நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளிக்கும் மகிழ்ந்து செல்கின்றனர்.

Tags:    

Similar News