திருடிய நகைகளை செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்து போலீசில் சிக்கிய பெண்

தான் திருடிய நகைகளை செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த போது போலீசில் சிக்கிய பெண் கைதாகி உள்ளார்.

Update: 2022-10-08 06:51 GMT

போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஈசுவரி. 

செல்போன் பயன்படுத்துவதால்  கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் வாழ்க்கை தடம்புரள்கிறது. பள்ளிமாணவ, மாணவிகளின் படிப்பு பாழாகிறது என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் செல்போன்கள் பல நல்ல விஷயங்களுக்கு உதவியாக இருப்பதும் பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன. நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு பெண் செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்ததால்  சிக்கிய சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவந்தி நகரில் ஒரு வீட்டில் இருந்து  16 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. வீட்டு உரிமையாளர் இது பற்றி போலீசில் புகார் செய்தார். தென்காசி போலீசார் இது பற்றி  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். ஆனால் இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.  எந்த தடயமும் இல்லாமல் திருடப்பட்டு இருந்ததால் குற்றாவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். 

திருட்டு நடந்த வீட்டில்  ஈஸ்வரி என்ற பெண் வேலை பார்த்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். திருட்டு நடந்த அன்று நான் வேலைக்கு வரவில்லை அதனால் எனக்கும் திருட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனறு அந்த பெண் கூறிவிட்டார். ஈஸ்வரி மீது எந்த போலீஸ் நிலையத்திலும் வழக்கு எதுவும் இல்லை அதனால்  அவர் மீது போலீசார் சந்தேகப்படவில்லை.  

திருட்டு நடந்து 3ஆண்டுகள் ஆன நிலையிலும்  இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.  இந்த நிலையில்  சில நாட்களுக்கு முன்பு ஈசுவரி தனது செல்போனில்  சில நகைகளின் படங்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்து இருந்தார். ஈசுவரி போன் நம்பரை வீட்டு உரிமையாளர் வைத்து இருந்தார். அதனால் அந்த  ஸ்டேட்டசை வீட்டு உரிமையாளர் பார்த்தார். அந்த நகைகள் திருட்டு போன தனது நகைகள் போல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  வாட்ஸப் ஸ்டேட்டஸ் புகைப்படத்தின் மூலமாக கிடைத்த தகவல் அடிப்படையில் தென்காசி காவல் ஆய்வாளர்  பாலமுருகன்  தலைமையில் தென்காசி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் செல்வி  மற்றும் பெண் காவலர்கள்  தாமரை,  மலர்கொடி ஆகியோர்கள் ஈசுவரியிடம் விசாரணை நடத்தினார்கள்.  வேலை பார்த்த வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். 

இதையொட்டி திருட்டு போன 16பவுன் நகைகளை ஈசுவரியிடம் இருந்து போலீசார் மீட்டனர். அவரை கைது செய்து  கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். திருட்டு நடந்து 3ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த வழக்கில் குற்றவாளி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கிியது அந்த பகுதியில் பரபரப்பாக இருந்தது.  இந்த நடவடிக்கையால் தென்காசி காவல்துறையை பொதுமக்கள் பாராட்டினர். 

Tags:    

Similar News