தென்காசி: குடும்பப்பிரச்னையால் இரு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

திருமணம் ஆகி 6 வருடம் ஆகியநிலையில் குடும்பிரச்னையால் தாய் தன் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை- ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு

Update: 2021-07-13 12:03 GMT

தென்காசி மாவட்டம், கடையம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

தென்காசி மாவட்டம், கடையம் அடுத்துள்ள செக்கடியூர்,  நடு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் .இவருக்கும் தென்காசியை சேர்ந்த கௌரி கனகா( 30 ), என்பவருக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகின்றன . இவர்களுக்கு கீர்த்தன்(5), இலக்கியா(3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையே பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாம். இதன் காரணமாக கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு கௌரிகனகா சென்றுவிட்டார். கடந்த வாரம் கனகாவை சமாதனம் செய்து அவரது கணவர் சுரேஷ் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கௌரி கனகா தன்மீதும் தனது இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், கடையம் காவல்நிலைய  ஆய்வாளர் ரெகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News