விவசாயிகளின் போராட்டம் வெற்றி - தினசரி சந்தை நேரம் மாற்றம்.

Update: 2021-05-19 13:22 GMT

பெருந்தலைவர் காமராசர் தினசரி காய்கறி சந்தை சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன்...

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் தினசரி காய்கறி சந்தை விவசாயிகள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று நேர கட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் மாற்றி வழங்கியது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் பெருந்தலைவர் காமராசர் தினசரி காய்கறி மொத்த விற்பனை சந்தையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது.

இங்கு பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மகிழ்வண்ணநாதபுரம், மேலப்பாவூர், சிவகுருநாதபுரம் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கின்ற காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பில் இந்த மார்க்கெட்டில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க காய்கறி சந்தை காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்க அனுமதித்துள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை சந்தையில் விற்பனை செய்ய முடியாத சூழலும், இங்கிருந்து ஏற்றுமதி செய்ய லோடு ஏற்ற முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பெருந்தலைவர் காமராசர் தினசரி காய்கறி சந்தை நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் மற்றும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு நேர கட்டுப்பாட்டை மாற்றி அமைத்து தரக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தினசரி சில்லரை விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மொத்த விற்பனை கடைகள் மற்றும் வெளி மாநிலம் வெளி மாவட்டங்களுக்கு மதியம் 3 மணி முதல் 10 மணி வரை காய்கறிகளை அனுப்பி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதாக பெருந்தலைவர் காமராசர் தினசரி காய்கறி சந்தை சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தெரிவித்தார். இதனால் வியாபாரிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News