ராணிபேட்டை அருகே கிராம மக்கள் குடிதண்ணீர், சாலை வசதி கோரி சாலை மறியல்

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கோடியூர் கிராம மக்கள் குடிநீர் மற்றும் சாலை வசதி கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2021-07-26 10:50 GMT

சிப்காட் அடுத்த கோடியூர் கிராம மக்கள் குடிநீர் மற்றும் சாலை வசதி கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா, சிப்காட் அடுத்த கோடியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம், ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது.

கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடைக்கோடி கிராமம் என்பதால்,கிராமத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் எந்த ஒரு நலதிட்டமும் வழங்காமல் புறக்கணிப்பதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் சாலைகள் முற்றிலுமாக பழுதடைந்த நிலையில் இரவில் விளக்குகளின்றி பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, ஊராட்சி செயலாளர் சோழனிடம் பலமுறை முறையிட்டும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  மேலும், அந்த ஊருக்கு தண்ணீர் பம்ப் செய்யும்  மின் மோட்டாரை ஊராட்சி செயலாளர் விற்றுவிட்டதால் ஊருக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என ஊர்மக்கள் குற்றம்சாட்டினை வைக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் பொன்னையிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாலாஜாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  அதில்,உடன்பாடு ஏற்படவே சாலை மறியலை கைவிட்டனர்

மேலும் ,அந்தப் பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டி  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...

Tags:    

Similar News