வாலாஜா அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 2பேர் படுகாயம்.
வாலாஜா அடுத்த அனந்தலை கல்குவாரியில் பாறைகளை தகர்க்க வெடி வைத்தபோது விபத்து ஏற்பட்டு தொழிலாளிகள் 2 பேர் படுகாயமடைந்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை கிராமததையொட்டியுள்ள மலையில் ரீமிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் கல்குவாரி இயங்கிவருகிறது. குவாரியில் பணியாளர்கள் தீபாவளி விடுமுறைக்குப்பிறகு வந்து பணியாற்றி கொண்டிருந்தனர்.
அவர்களில் , ஜெயவேல்(44),சேட்டு (44) ஆகிய இருவரும் பாறைகளைத் தகர்க்க துளையிட்டு வெடிமருந்துகளை நிரப்பி வெடிக்கச் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அதில், ஏற்கனவே துளையிட்டு மருந்துகள் நிரப்பியுள்ள துளைகளில் கவனிக்காமல் தவறுதலாக மீண்டும் துளையிடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது துளையில் ஏற்கனவே நிரப்பப்பட்டிருந்த வெடிமருந்து உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக திடீரென வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் ஜெயவேல்,சேட்டு ஆகிய தொழிலாளிகள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே,அருகிலிருந்தவர்கள் இருவரையும் சிகிச்சைக்கு இராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், அவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இச்சம்பவம் குறித்து வாலாஜாப்போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.