ராணிபேட்டை மாவட்டத்தில் மின் வெட்டு, வறட்சியால் காய்ந்துபோன நெல்நடவு
தொடர்மின் வெட்டால் நீர்பாசனமின்றி, வறட்சியால் நிலத்தில் காய்ந்து சருகான பயிர்களைப் பார்த்து விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, அரக்கோணம் மற்றும் நெமிலி உள்ளிட்ட அனைத்து தாலூக்காவிற்கு உட்பட்ட பெரும்பாலான கிராமப் பகுதிமக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக விவசாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவ மழையை எதிர்நோக்கி இருந்தனர்..
அதில் எதிர்பார்த்த அளவில் மழைப்பெய்யாததால்,கிணற்று நீரை நம்பி ஆங்காங்கே உள்ள சிறு குறு விவசாயிகள் நெல் பயிரிட சேற்றை கலக்கி நாற்று விட்டு, பின்பு அவற்றை நடவு செய்துள்ளனர். இந்நிலையில் அவற்றிற்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தங்கள் பம்பு செட்டுகள் மூலமாக நீரைப்பாய்ச்சி வருகின்றனர்.
இச்சூழலில் கடந்த சில நாட்களாக மின் வாரியத்தின் அறிவிப்பில்லா தொடர் மின் வெட்டால் மாவட்டத்தில் பாணாவரம், பணப்பாக்கம் வாலாஜா அடுத்த வள்ளவம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் நெற் பயிர்கள் தற்போது கதிர் விடும் நிலையில் உள்ளன. அவைகளுக்கு தற்போது ஏற்படும் பல மணி நேர மின்வெட்டு காரணமாக நீர்பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலையடைந்த நிலையில் உள்ளனர். இதனால் நீர் இன்றி நடவு செய்த பயிர்கள் வறட்சியில் காயந்து விட்டன .
வேதனையடைந்த விவசாயிகள் மாடுகளை மேய விட்டுள்ளனர். சிலர் அவற்றைப் பார்த்து செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து சம்பத்தப்பட்டத் துறையினரிடம் பல தடவை முறையிட்டும் பதிலேதும் கிடைக்கவில்லை எனவே வறட்சியால் வாடி வரும் விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.