தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது: ஓபிஎஸ் பேச்சு

தினசரி கொலை ,கொள்ளை, வழிப்பறி என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு

Update: 2021-10-02 12:42 GMT

அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்

ராணிப்பேட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வாலாஜாப்பேட்டை பைபாஸில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அதில் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தனர்.

அதனால் ,தற்போது மக்கள் அதிமுகவுக்கு அதிக அளவில் வாக்களிக்க உள்ளனர். தொண்டர்களிடையே  அதிக மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் மகத்தான வெற்றி பெறும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சின்னச்சின்ன பிரச்சினைக்காக அதிமுக தோல்வி அடைந்தது. ஆனால் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் நூறு சதவீதத்திற்கும் மேலாக அதிமுக வெற்றி பெறும்.

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன்அவை எல்லாம் காற்றில் பறக்க விட்டார். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.அதனை நிறைவேற்றினாரா? பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்து நிறைவேற்றினாரா? இது போன்று எத்தனையோ வாக்குறுதிகளை அளித்துள்ளார் ஆனால் அவையெல்லாம் நிறைவேற்றினாரா?

அதிமுக ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.  குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது  வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டது. 

ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஐந்து மாதங்களில் தினந்தோறும் கொள்ளை, கொலை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. நாடா அல்லது அமளி காடா என்று தெரியவில்லை.  இன்றைக்கு ரவுடிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வந்துள்ளனர்.  

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால்தான் தொழிற்சாலைகள் துவங்க யாரும் முன்வரவில்லை.  அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மின் மிகை மாநிலமாக இருந்தது ஆனால் இன்றைக்கு அது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளையும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை பொதுமக்களிடையே எடுத்துக் கூறி வாக்கு கேட்க வேண்டும் என அவர் தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News