ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பம் செய்ய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-06-08 14:31 GMT

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி (கோப்பு படம்).

2023-2024-ம் கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவம் மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் (85 சதவீதம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10 சதவீதம்) பிற வகுப்பினர்கள் (5 சதவீதம்) என்ற விகிதத்தில் விடுதிகளில் சேர்ப்பதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். (மாணவிகளுக்கும், பெற்றோரை இழந்த மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது).

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும், 4 இணை சீருடைகளும், 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் இலவசமாக வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை 2023-2024-ம் கல்வியாண்டு முதல் விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளதால் மாணவ-மாணவிகள் http://tnadw.hms.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறை புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளுக்கு உதவிடுமாறு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவ-மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News