நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மர்மமான முறையில் மரணம்
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மர்மமான முறையில் மரணமடைந்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரை சேர்ந்த பரமசிவம் மகன் அருள் (48). வக்கீலாக பெரம்பலூர் கோர்ட்டில் பணிபுரிந்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து, ஜல்லிக்கட்டு, உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்தி வந்தார். பல சமூக பிரச்சனைகளையும் கையில் எடுத்து போராட்டம் நடத்தியுள்ளார் .
குன்னம் தொகுதியில் வேட்பாளராகவும் இருமுறை போட்டியிட்டவர். மேலும், இவரது மனைவி தமிழரசி ஓலைப்பாடி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், நீண்ட நேரம் திறக்காததால் , கதவை திறந்த பார்த்த போது செல்போன், கேட்செட் துண்டுடன் இறந்த நிலையில் சுவற்றில் சாய்ந்து கிடந்தார்.
மாராடைப்பால் உயிரிழந்தாரா அல்லது உணவில் விஷம் வைத்து கொன்றனரா அல்லது வேறு யாராவது முன்விரோத்தில் கொலை செய்து கிடத்தி விட்டு சென்று விட்டனரா என்ற பல்வேறு கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அவரது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது . இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் மாவட்ட செயலாளர் அருள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களும், கட்சித் தொண்டர்களும் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். அவர் உடலை நுணுக்கமான முறையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் நாங்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் ஈடுபடுவோம் என கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.