செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

Update: 2023-06-11 16:52 GMT

பெரம்பலூர் அருகே ரேஷன் கடையில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் ரேஷன் கடையில்  மாவட்ட ஆட்சியர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பு குறித்தும், அந்த ரேஷன் கடைக்கு உட்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா? என்பது குறித்தும், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தரம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் வாங்க வந்திருந்த மக்களிடம், அரிசியில் உள்ள செறிவூட்டப்பட்ட அரிசிகளை எடுத்துக்காட்டி, இது என்ன அரிசி என்று தெரியுமா? என்று கேட்டார்.

அதற்கு அங்கிருந்த பெண்கள், அரிசியினை கழுவும்போது இது போன்ற அரிசிகள் சில மிதக்கும். அவற்றை எடுத்துவிட்டு, மீதமுள்ள அரிசியினை சமைத்து உண்போம் என்று தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய கலெக்டர், அந்த அரிசிகள் தான் செறிவூட்டப்பட்ட சத்தான அரிசிகள். இந்த செறிவூட்டப்பட்ட அரிசியினை சாப்பிடுவதால் ரத்த சோகை தடுக்கப்படுகின்றது.

இந்த அரிசியில் உள்ள போலிக் அமிலம், கரு வளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும், வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக அரசால் இந்த அரிசி வழங்கப்படுகிறது. சத்து மிகுந்த அரிசி தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. தண்ணீரில் மிதக்கிறது என்ற காரணத்தால் தூக்கி எறிந்து விடாதீர்கள், என்று தெரிவித்தார்.

மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டியிருந்தபோதும், இது குறித்து பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் கடை விற்பனையாளர் இது குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்றும், கிராமங்கள் தோறும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News