பெரம்பலூர் மருத்துவமனையில் அதி நவீன உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அரங்கம்

பெரம்பலூர் மருத்துவமனையில் அதி நவீன உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா திறந்து வைத்தார்.

Update: 2021-07-15 14:30 GMT

பெரம்பலூர் சிறுவாச்சூர் பகுதியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2009ம் ஆண்டு முதல் 12 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய துவங்கி தற்பொழுது வரை சுமார் 50 பேருக்கு மேல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2021 லிருந்து இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்க்கான அனுமதி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது அதிநவீன வசதிகளுடன் கூடிய 6 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அரங்குகள் ( இருதயம் , சிறுநீரகம் , கல்லீரல் ) தலா ரூ. ஒரு கோடி மதிப்பீட்டின் படி மொத்தம் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையை அடுத்து இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதி நவீன உறுப்புமாற்று அறுவைசிகிச்சை அரங்குகளின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு அறுவை சிகிச்சை அறங்கங்களை திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவனை நிர்வாகத்தினர் கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமளவு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றார். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு இந்த உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News