நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் நாம் அனைவரின் கோரிக்கை: திருமாவளவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன் , முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

Update: 2021-09-09 16:00 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலைதச்சிறுத்தைகள் கட்சித்தலைவர்  தொல்.திருமாவளவன் எம்.பி.

 நீட்தேர்வு வேண்டாம் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாகும் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் இரா.கிட்டு   இல்லத்தில் தொல்காப்பிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நூலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்து நூலகத்தை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு சமூக நீதி அரசு என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக முதல்வரின்  அறிவிப்பும்,செயல் திட்டங்களும் சமூக நீதியை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது.செப்டம்பர் 17 -ஆம் தேதியான பெரியார் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதி உறுதி மொழி ஏற்கப்படும் என தெரிவித்தார்.

செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி ,முருகன், உள்ளிட்ட 7 பேரையும் மற்றும் சிறையில் 7 ஆண்டுகள் , 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், செப்டம்பர் 15ம் அண்ணா பிறந்த நாளில், இது தொடர்பாக தமிழக முதல்வரின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்ப்பு உருவாகி உள்ளது.

தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு விடுதலை செய்ய வேண்டும்.  அதேபோல், ஈழத் தமிழர்கள் எந்த விசாரணை இல்லாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு முகாமில் அடைப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூட்டாட்சி தத்துவத்தை கூறிய, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை, மாநில சுயாட்சி நாளாக, மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் உருவாக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு, விடுதலை சிறுத்தைகள் சார்பில் நன்றி பாராட்டுகிறோம்.

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் நாம் அனைவரின் கோரிக்கை. திமுக அரசும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. ஒன்றிய அரசு தான் நீட் தேர்வு குறித்து முடிவு செய்ய முடியும். ஒன்றிய அரசின் கவனத்திற்கு திமுக அரசு கொண்டு சென்று உள்ளது. நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருப்போம் என்றார் தொல்.திருமாவளவன். இதில்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News