காந்திஜியின் பிறந்த நாள்: நம்மால் முடியும் நண்பர்களால் மரக்கன்றுகள் நடவு
இதையொட்டி அங்கன்வாடி வளாகம், ஏரிக்கரை, சாலையோரம் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன
மகாத்மா காந்தியின் 153 -ஆவது பிறந்த நாள் விழாவானது நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், இரூர்,ஆலத்தூர்கேட் உள்பட ஆலத்தூர் வட்டாரப் பகுதிகளில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் முன்பு காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.இதனையடுத்து, அங்கன்வாடி வளாகம், ஏரிக்கரை, சாலையோரம் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நட்டுவிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகம், கோயில்கள், சாலையோர பகுதிகளில் உள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை அகற்றி தூய்மை செய்யப்பட்டன. ஏற்பாடுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழு அமைப்பினர் செய்திருந்தனர்.