பெரம்பலூர்: நாளை 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 193 இடங்களில், பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Update: 2021-09-11 10:15 GMT

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து, எளம்பலூரில் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கடபிரியா, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். 

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், நாளை 193 இடங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பிரம்மாண்டமான முகாம்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்திற்கு 27,600 நபர்களுக்கு அன்றைய ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,200 நபர்கள் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் சிறப்பு தடுப்பூசி முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். சிறப்பு மையங்களில் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. எனவே, அனைவரும் மறக்காமல், மறுக்காமல் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக, பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர், செஞ்சேரி, ரெங்கநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கடபிரியா, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) அ.லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ம.பாரதிதாசன், ஊராட்சிமன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News