பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
பெரம்பலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பலூர் காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பெரம்பலூர் நகரில் விற்பனை செய்யப்படுகின்றதா என சிறப்பு ரோந்து மேற்கொண்டனர்.
இந்நிலையில் பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவலர்களுடன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சென்று பார்த்தபோது ஒரு நபர் வெள்ளை தாளில் வரிசையாக எண்களை எழுதி வைத்துக்கொண்டிருந்தவரை விசாரிக்க, அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையொட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த தர்மராஜ் (33) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து லாட்டரி விற்ற பணம் ரூபாய் 9300/- பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.