சிலிண்டர் விலை குறையுமா ? மத்திய நிதி அமைச்சரிடம் பெண்கள் கேள்வி

காஞ்சிபுரம் அடுத்த பழையசீவரம் பகுதியில் மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற தேர்தலுக்கான சுவர் விளம்பர பிரச்சாரத்தை நேற்று துவக்கினார்.

Update: 2023-04-02 03:00 GMT

காஞ்சிபுரம் அடுத்த திருமுக்கூடல் கிராம பகுதிக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமிடம் சிலிண்டர் விலை குறையுமா என பெண்கள் கேட்டதற்கு அதற்கான விலை விளக்கம் அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம் கிராமத்திற்கு வருகைபுரிந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் வேல்முருகன் ஆகியோரை கிராம மக்கள் மேள தாளத்துடன் வரவேற்றனர்.

பின்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூடியிருந்த பெண்களிடம் தங்கள் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றனவா எனவும் கிராமத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் பெறப்பட்டனவா என்றவாறு கேட்டறிந்தார்.

அப்பொழுது கூடி இருந்த பெண்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன ஆனால் சிலிண்டர் விலை மட்டும் ஏறிக்கொண்டே செல்வதால் சிலிண்டர் வாங்குவதற்கு சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர்.

அவற்றிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  நமது நாட்டில் சிலிண்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தால் வெளி நாடுகளில் இருந்து பெறப்படுவதால் அங்கிருந்து பெறப்படும் விலைக்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றும்,  தங்கள் வாங்கும் சிலிண்டருக்கு தேவையான மானியங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் பெண்களிடையே தெரிவித்தார்.

மேலும் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும் குறைவாகவும் போடுவதால் நாங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர்.

அவற்றுக்கு மத்திய அமைச்சர்,  ஏற்கனவே நாங்கள் இலவசமாக மத்திய அரசு மூலம் வழங்கப்பட்ட அரிசியை நிறுத்தப்பட்டதாகவும் அதற்கு பதிலாக மூன்று ரூபாய் கொடுத்து வாங்கிய அரிசிக்கு பதிலாக இலவச அரிசியை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்து தங்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவை தரமான அரிசியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக மத்திய செயலாளர் பூபாலன் வீட்டின் சுவரில்,  வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சுவற்றில் வரையப்பட்ட தாமரைச் சின்னத்திற்கு வர்ணம் பூசி தாமரையை வரைந்து சுவர் விளம்பரத்தை துவக்கி வைத்தார்.

இவர்களுடன் மத்திய இணையமைச்சர் மற்றும் மாநில பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் மாநில இளைஞரணி தலைவர் வினோத் ப. செல்வம் ஆகியோர் தாமரை சின்னத்தை முழுமையாக வண்ணம் தீட்டி சுவற்றில் வரைந்தனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் பாஸ்கரன்,  மாவட்ட தலைவர் கே எஸ் பாபு , மாவட்ட பொது செயலாளர் ருத்ரகுமார் மற்றும் மண்டல மத்திய பாஜக நிர்வாகிகள் தாமரை சின்னத்தை வரைந்து சுவர் விளம்பரம் அப்பகுதியில் வரையப்பட்டன.

Tags:    

Similar News