மீண்டும் சாலைகளில் வரவேற்பு கொடி கம்பங்கள், அரசு ஆரம்பத்திலேயே கட்டுப் படுத்துமா ?
காஞ்சிபுரம் சாலைகளில் கட்சி பிரமுகர்களை வரவேற்க கொடி கம்பங்கள் வைக்கப்படுகிறது. இதனை அரசு ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் எந்த ஒரு தனி நபர் மற்றும் அரசியல் விழாக்களில் கொடி , வரவேற்பு வளைவுகள் என சாலை முழுவதும் வைத்து வந்த சூழ்நிலையில் சென்னையில் ஏற்பட்ட விபத்து உயிரழப்புக்கு பிறகு அதை தடை செய்யவேண்டும் என ஒருமித்த கருத்து உருவாகியது.
இந்நிலையில் இந்த செய்கைக்கு அப்போது திமுக கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் கூட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கள் உறுப்பினர்களை இச் செயலை செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நலத்துறை சார்பில் நடக்கும் விழாவிற்காக காஞ்சிபுரம் நகரம் முழுவதும் சாலைகளில் இருபுறமும் தெரிந்து பெரிய கம்பங்களை தங்கள் கட்சி கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.
சில இடங்களில் மின்கம்பத்தில் கொடிகட்டி சாய்வாக சாலையோரம் விபத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. கடந்த காலங்களில் தவறு நடக்க கூடாது என தெரிவித்த தற்போதைய ஆளும் அரசு இதை ஆரம்பத்திலேயே கட்டுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.