ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2022-11-18 14:00 GMT

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். 

தொழிற்சாலைகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய தொழிற்சாலை பகுதிகளாக ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகள் உள்ளன. மேலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளும் தற்போது உருவாகி வருகிறது.

பல ஆயிரம் தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலை பணிக்கு செல்ல ஊழியர்கள் இருசக்கர வாகனத்தினை பயன்படுத்துகின்றனர். மேலும், பல ஊர்களில் இருந்து வரும் ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்வது வழக்கம்.

அப்படி செல்லும்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட இதுபோன்ற திருட்டு புகார்கள் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் உத்தரவின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் ஆலோசனையின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் தலைமையில் பல்வேறு இடங்களில் திடீர் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளூர் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரண்டு பைக்கில் வந்த நான்கு பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த இரண்டு பைக்கும் திருட்டு பைக் என தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், ஜெயச்சந்திரன், வீரமணி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் நான்கு பேரும் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News