கோயில் கோபுரங்களில் மரம் வளர்க்கும் இந்து சமய அறநிலைத்துறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு திருக்கோயில்களில் ராஜகோபுரங்களில் உள்ள செடிகளை அகற்றாவிட்டால் பெருத்த சேதங்கள் ஏற்படும் என பக்தர்கள் கூறினர்

Update: 2023-06-15 14:15 GMT

அருள்மிகு குமரக்கோட்டம் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் ராஜகோபுரத்தில் மர செடிகள் முளைத்துள்ள காட்சி.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் புகழ்பெற்றதும் பல்வேறு திருக்கோயில்கள் பரிகார தலங்களாகவும் , வைணவ திருத்தலங்கள் திவ்யதேசங்களாகவும் திகழ்ந்து வரும் நிலையில் தரிசனம் மேற்கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநில நாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில், ஏகாம்பரநாதர் திருக்கோயில், காமாட்சி அம்மன் கோயில், அருள்மிகு ஸ்ரீ குமரக்கோட்டம் என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களின் முகப்புகளில் ஐந்து மற்றும் ஏழு நிலை ராஜகோபரங்கள் பல லட்சம் மதிப்பீட்டில் அக்காலத்திலேயே உருவாக்கப்பட்டு தற்போது வரை அதை இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.

இந்நிலையில் கந்த புராணம் அரங்கேறியதும், புகழ் பெற்ற முருகன் திருக்கோயில் என அழைக்கப்படும் குமரக்கோட்டம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயில் ராஜகோபுரம் பல்வேறு  வண்ணங்களில் சிற்பங்களுடன் ஐந்து நிலைகள் கொண்டு அழகாக ராஜவீதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில் ராஜகோபுரங்களில் செடிகள் அதிக அளவில் முளைத்தும் அது அதிதீவிரமாக வேரூன்றும் நிலையும் உள்ளதால் சிற்பங்கள் சேதம் அடைவது மட்டுமல்லாமல் ராஜ கோபுரங்களும் சேதமடைய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்து சமய அறநிலைத்துறை உடனடியாக இதில் கவனம் கொண்டு திருக்கோயில் ராஜகோபுரங்களில் உள்ள செடிகளை வேரோடு அகற்றி திருக்கோயில் கோபுரங்களை பராமரிக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக வைக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், திருக்கோயில்களில் உள்ள ராஜகோபுரங்களில் உள்ள செடிகளை முறையாக அகற்ற பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்க தனி நிதி ஒதுக்கப்படுவதாகவும், இதனை அகற்றும் ஊழியருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளித்து அதனை நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறைவான நிதி ஒதுக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தாலும் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருக்கோயில் ராஜகோபுரங்கள் சிதலமடைவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கின்றனர்.

சாலையில் மட்டுமே மரம் வளர்க்க வேண்டும் என்ற நிலையில்,  திருக்கோயில் ராஜகோபுரங்களில் மரம் வளர்க்கும் இந்து சமய அறநிலையத்துறையின் செய்கை வேடிக்கையாகவே உள்ளது.

Tags:    

Similar News