காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 380 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கலைசெல்வி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-12 11:45 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறமைகளுக்கான திறன் பேசியை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்  கூட்டத்தில்,  மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.98,396 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 380 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இன்று  நடைபெற்ற  மக்கள்  குறைதீர்க்கும்  நாள்  கூட்டத்தில், ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.45,000/- மதிப்பிலான திருமண உதவித்தொகைக்கான தங்க நாணயமும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.53,396/- மதிப்பிலான திறன் பேசிகளும் (Smart Phone) மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட   வருவாய்   அலுவலர்   வெங்கடேஷ்,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் கடந்த மாதங்களில் பெறப்பட்ட மனுக்களின் நிலை மற்றும் நிலுவைக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நிலுவை மனுக்களின் விவரங்கள் குறித்து புகார்தாரருக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் அதற்கான கால அவகாசம் என்ன என்பதையும் அவர்களுக்கு கூறி தொடர் மனு அளிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

Tags:    

Similar News