ஏகனாபுரத்தை தொடர்ந்து நாகப்பட்டு கிராம பொதுமக்களும் தேர்தல் புறக்கணிப்பு..!

இரண்டாவது பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனவும் அறிவிப்பு.

Update: 2024-04-13 05:15 GMT

பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடும் வரை போராட்டங்கள் நடைபெறும் எனவும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து இருப்பதாக அறிவித்து , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகப்பட்டு கிராம பொதுமக்கள்

ஏகனாபுரம் கிராமத்தைத் தொடர்ந்து நாகப்பட்டு கிராமமும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்து இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்ப நாள் முதலே 13 கிராமங்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு குழுவினர் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.


இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர் அவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் அதனை ஏற்காது தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டு கிராம மக்களும் இன்று காலை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என அறிவித்து கிராமப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாத அரசை கண்டித்தும், விவசாய நிலங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர். இந்த கிராமம் முழுவதும் சுமார் 250 ஏக்கர் விலை நிலங்களும் 86 குடியிருப்புகளும் முற்றிலும் அகற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக கூறும் இரண்டாவது கிராமம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News