அம்பேத்கரின் அறியப்படாத உண்மைகள் தெரியுமா?- மத்திய அமைச்சர் எல்.முருகன்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடந்த அம்பேத்கர் விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.

Update: 2022-04-22 06:20 GMT

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் மத்திய மந்திரி எல் முருகன் காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.

தேசிய சிந்தனைக்கழகம், அகில பாரத பிரக்ஞா பிரவாஹூன் தமிழக கிளை மற்றும் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி ஆகியன இணைந்து தமிழ்ப்புத்தாண்டு விழா,அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் சுதந்திர 75 ம் கொண்டாட்ட விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலர் வி.பி.ரிஷிகேஷன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் ராம.வெங்கடேசன் வரவேற்றார்.

விழாவில் புது டெல்லியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது

தமிழர்களின் பெருமை உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது.தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு,வீரம் ஆகியன போற்றப்பட வேண்டியவையாகும்.சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல அறியப்படாத வீரர்களை கௌரவிக்கும் விதமாகவே மத்திய அரசு இந்த ஆண்டு நாடு முழுவதும் சுதந்திரம் 75 என்ற பெயரில் கொண்டாடி வருகிறது.

அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர் என்று மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவர் மிகச்சிறந்த பொருளாதார மேதை என்பது பலருக்கும் தெரியாது. ரூ.200கோடி மதிப்பில் புது டெல்லியில் அம்பேத்கர் பெயரில் உலக அளவிலான ஆராய்ச்சி மையம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அம்பேத்கரின் பிறப்பிடம், வசிப்பிடம்,வாழ்ந்த இடம்,நினைவிடம் ஆகியனவற்றை பிரதமர் மோடி புனித தலங்களாகவும் அறிவித்துள்ளார்.நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் தேசிய வல்லமை தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கர் காட்டிய வழியில் உண்மையான சமூக நீதியை நிலை நாட்டி வருகிறார் பிரதமர் மோடி என்றார்.

விழாவில் எஸ்.மகாலிங்க ஐயர் எழுதியபொருளியல்,பணவியல்,அரசியல், அறவியல் என்ற நூலை அவரது மகன் கோபால கிருஷ்ணன் வெளியிட அதன் முதல் பிரதியை சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடியும், 2வது பிரதியை பொருளியல் பேராசிரியை எஸ்.சின்னம்மையும் பெற்றுக் கொண்டனர்.


Tags:    

Similar News