தனியாக கிடந்த வெடி மருந்தால் பரபரப்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தனியாக கிடந்த வெடி மருந்தால் பரபரப்பு ஏற்பட்டது, காவல்துறை வெடிகளை மீட்டு சோதனை செய்தது. சோதனையில் வெடிகுண்டு அல்ல, வானவேடிக்கைகாக பயன்படுத்தப்படும் பட்டாசு வகை என்பதை உறுதிப்படுத்தியது.

Update: 2021-03-19 02:18 GMT

காஞ்சிபுரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் நேற்று மாலை 4 மணி அளவில் மர்மப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் மர்ம பொருளை பாதுகாப்பாக எடுத்துச் சென்று சோதனை மேற்கொண்டு வந்தனர். இதனிடையில் அந்த மர்ம பொருளை அப்பகுதியில் வைத்து சென்ற நபர்கள் குறித்தும் காவல் துறை தீவிரமாக பேருந்து நிலையம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர்.

இந்நிலையில் மர்ம பொருளை சோதனை செய்த வெடிபொருள் செயலிழப்பு பிரிவினர் இது திருவிழாக்கலங்களில் மேலே சென்று வெடிக்கக்கூடிய வாணவேடிக்கை, வெடி வகையை சார்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தேன்மொழி உறுதிப்படுத்தினார். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்தார். மக்கள் மத்தியில் இருந்த பீதி அகன்றது. 

Tags:    

Similar News