செய்யாறு பாலத்தில் மீண்டும் விரிசல்: போக்குவரத்து நிறுத்தம்

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் செய்யாற்று தற்காலிக பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-04 05:15 GMT

செய்யாறு தற்காலிக பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

செய்யாறு தற்காலிக பாலம் மீண்டும் சேதம் அடைந்ததால் பாதுகாப்பு காரணம் கருதி பேருந்து கனரக லாரிகள் செல்ல தடை விதித்து, இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பயணிக்க காவல்துறை அனுமதித்து வருகிறது. இதனால் பயணிகள் பாலத்தைக் கடந்து அங்கிருந்து பேருந்தில் செல்லும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை , மாண்டாஸ் புயல்  காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 284 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது வரை நீர் சென்று கொண்டிருக்கிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் மாகரல் அருகே அமைந்துள்ள செய்யாற்றில் தற்போது வரை நீர் சென்று கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த செய்யாற்று மேம்பாலம் சேதம் அடைந்ததையொட்டி புதிய மேம்பால கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையால் மீண்டும் பாலம் துண்டிக்கப்பட்டது. அதனை தற்காலிகமாக சரி செய்து மீண்டும் போக்குவரத்து இயங்கி வந்த நிலையில் தற்போது தற்காலிக பாதத்தில் ஓட்டை விழுந்ததால் பாதுகாப்பு காரணம் கருதி மாகரல் காவல்துறை பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தற்போது காவல்துறை அனுமதி அளித்து வருகிறது.

தொடர்ச்சியாக செய்யாற்றில் நீர் வந்து கொண்டிருப்பதால் புதிய பாலகட்டுமான பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டுமே இருமுறை தற்காலிக பாலம் சேதம் அடைந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த திடீர் தடை காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் நடந்து அக்கரைக்கு சென்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வீடு செல்லும் நபர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வப்போது ஏற்படும் இந்த தடை முற்றிலும் நீங்கும் வகையில் தற்காலிக பாலத்தையும் முழுமையாக சீர்படுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தற்போது நீர் செல்லும் பாதையை மாற்றி தற்காலிக பாலத்தை உடனடியாக செப்பனிட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது

Tags:    

Similar News