தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக மீது வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மீதும் இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-04-04 11:15 GMT

 காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பத்து அரசியல் கட்சியின் மீது 25 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் நடத்தை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 16 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை 25 வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆளும் கட்சியான திமுக மீது 7 வழக்குகளும், அதிமுக மீது 5 வழக்குகளும், பாமக மீது 3 வழக்குகளும்,தேமுதிக 3 வழக்குகளும், நாம் தமிழர் கட்சி மீது 2 வழக்குகளும், காங்கிரஸ் பாஜக மீது தலா 1 வழக்குகளும், மற்ற கட்சியினரின் மீது 3 வழக்குகளும் என 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் தனது செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் எச்சரிக்கை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News