வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்: அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு
கள்ளக்குறிச்சியில், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி நகராட்சி, வடக்கனந்தல், சின்னசேலம், சங்கராபுரம், மணலுார்பேட்டை, தியாகதுருகம் பேரூராட்சிகள் என மாவட்டம் முழுதும் 136 ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் செய்யப்பட்டு, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தொடர்பாக, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள், தேர்தல் இடஒதுக்கீடு விபரத்தை பத்திரிகைகளில் அறிவிப்பு செய்ய வேண்டும். சங்கராபுரம் மற்றும் மணலுார்பேட்டை பேரூராட்சியில் கூடுதல் ஓட்டுச்சாவடி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமாரி (வளர்ச்சி), முரளி (தேர்தல்), நகராட்சி கமிஷனர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.