நெல் அறுவடை பணி தீவிரம்: கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை

நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-02-10 01:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் தீவிரமாக நடைபெறும் நெல் அறுவடை பணிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளதால், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கனியாமூர், நயினார்பாளையம், அம்மகளத்துார், மேலுார், மேல்நாரியப்பனுார், தகரை உட்பட 50 கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் இந்தாண்டு நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட இந்தாண்டு, கூடுதல் மழைப்பொழிவு இருந்ததால், நெற்பயிர் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு அதிகரித்து சம்பா பருவத்தில் பொன்னி, பி.பி.டி, பொன்மணி போன்ற நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர்.அவை தற்போது, அறுவடைக்கு தயாராகியுள்ளதால் விவசாயிகள் பணிகளை துவங்கியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்: கடந்தாண்டு, அதிக மழைப்பொழிவால் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. அதேபோல் இந்தாண்டும், உழவு செய்யும் செலவு, ஆள் கூலி மற்றும் நெல் அறுவடைக்கான செலவு ஆகியவை, கடந்தாண்டை விட கூடுதலாகிவிட்டது.அதனால் ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 25,000 வரை செலவாகிறதால்,  நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பொன்னி, பி.பி.டி போன்ற நெல் ரகங்கள் ஒரு மூட்டை அதிகபட்சமாக 1,400 முதல் 1,600 வரை விலை போனது. ஆனால் இந்தாண்டு அதிக விளைச்சல் காரணமாக 1,300 க்கும் கீழ் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்ந்து, ஒவ்வொரு முறையும் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தை, அறுவடை ஆரம்பித்த சில நாட்கள் கழித்தே திறக்கப்படுகிறது. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லினை களத்தில் கொட்டி பாதுகாக்க முடியாமல், அதை அடிமாட்டு விலைக்கு தனியார் வியாபாரிகளுக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

விதை நெல்லுக்கு கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொள்வதால், நெல்லுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை.எனவே, தற்போது அறுவடை துவங்கியுள்ளதால் அரசு கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு மூட்டை 2,000 ரூபாய் நிர்ணயம் செய்தால் மட்டுமே வியாபாரிகள் சிண்டிகேட் அமைப்பதை தடுக்க முடியும் எனக் கூறினார்

Tags:    

Similar News