திருநாவலூரில் கீழே கண்டெடுக்கப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
திருநாவலூரில் கீழே கண்டெடுக்கப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் மனைவி கீர்த்தனா. இவர் திருநாவலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும்போது வழியில் ஆஞ்சநேயர் சிலை அருகே ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் கால் கொலுசு, ஒரு பவுன் தங்க செயின் தவரவிட்டார்.
இந்நிலையில், திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கோவிந்தராஜ் என்பவர் கீழே அந்த நகைகளை கண்டெடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த நகைகள் மற்றும் ரொக்கத்தை திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு போலீசார் பாராட்டுகளை தெரிவித்தனர்.