கள்ளக்குறிச்சியில் விசாரணைக்கு பயந்து பெண் காவலர் தற்கொலை முயற்சி
கள்ளக்குறிச்சியில் உயரதிகாரியின் விசாரணைக்கு பயந்து பெண் காவலர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் தீபா, 38; இவர், சில மாதங்களுக்கு முன் வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு அயல் பணியாக சென்றார். கடந்த 11ம் தேதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தேர்தல் பணியில் தீபா ஈடுபட்டிருந்தார்.
நேற்று காலை வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தீபா பணிக்குச் சென்றுள்ளார். அப்போது, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தேர்தல் பணிக்கு பின் அனுமதியின்றி விடுமுறை எடுத்ததால், விசாரிக்க தீபாவை மைக்கில் அழைத்துள்ளார்.
விசாரணைக்கு பயந்து தீபா மாத்திரைகளை பொடியாக்கி இருமல் மருந்து கலந்து குடித்துள்ளார் .இதில் மயக்கத்தில் இருந்த தீபா தானாகவே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி மருத்துவமனைக்கு சென்று தீபாவிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார் .
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் கடந்த 11ஆம் தேதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பணி முடிந்து சென்ற தீபா எவ்வித அனுமதி இன்றி ஒரு சில நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார். இதற்கான காரணத்தைக் கேட்க போலீஸ் நிலையம் வரும்படி தெரிவித்ததால் இருமல் மருந்தை குடித்துள்ளார் என்றார்.