கள்ளக்குறிச்சி: மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு
கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.
தமிழகத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி அறையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 'பெல்' நிறுவன பொறியாளர்கள் மூலம், முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, அதில், 5 சதவீதம் இயந்திரங்களை கொண்டு, மாதிரி ஓட்டுபதிவுக்கு மேற்கொள்ளப்பட்டது. 16 கட்டுபாட்டு இயந்திரங்களில், ஒவ்வொரு இயந்திரத்திலும் 1,000 மாதிரி ஓட்டுப்பதிவுகள் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.
பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு, மின்னணு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 'சீல்' வைத்து தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமாரி, முரளி, நகராட்சி கமிஷனர் குமரன் மற்றும் அரசியல் கட்சி பிரநிதிகள் பங்கேற்றனர்.