கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-10-23 16:08 GMT

கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் மாதா கோவில் மற்றும் தியாகதுருகம் வட்டாரத்திற்குட்பட்ட சோமநாதபுரம் கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்ற 6-வது மாபெரும் கொரோளா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்,  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியதன்படி, தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திடவும், கொரோனா பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.

இம்முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ஆகிய இடங்களில் தடுப்புசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் 16.01.2021 அன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 6,000 முதல் 6,500 நபர்களுக்கு கோவிஷில்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்கவும், கொரோனா நோயினால் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 455 இடங்களில் இன்று 6-வது மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் மாதா கோவிலில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரிதிநிதிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதிய விழிப்புணர்வு பணிகளை மேற்க்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, தியாகதுருகம் வட்டாரத்திற்குட்பட்ட சோமநாதபுரம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் குறித்த விவரங்களை கண்டறிந்து, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டன.

மேலும், பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாய்வின்போது, கள்ளக்குறிச்சி உதவி திட்ட அலுவலர்  ராஜவேல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News