பயிர்களை காத்துக்கொள்ள தோட்டக்கலை விவசாயிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்

தோட்டக்கலை பயிர்களை பருவ மழையில் இருந்து, பாதுகாத்துக் கொள்ள, விவசாயிகள் முன்னேற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-11-10 08:00 GMT

கோப்பு படம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் தோட்டக்கலை பயிரான மரவள்ளி 11,000 எக்டேர், மஞ்சள் 5,000 எக்டேர், கருணைக் கிழங்கு 1,500 எக்டேர், வாழை 5,000 எக்டேர், ஹோலியாஸ் 3,000 எக்டேர் மற்றும் பல்வேறு காய்கறிகள் வகைகள் 5,000 எக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் பயிரிடப்படுகிறது.

தற்போது வடக்கிழக்கு பருவமழை  பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவ மழையில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் பயிர்கள் சேதமடையும். அதில் இருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்ள, விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டாலும், அதிகளவில் பயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்கள் நிலங்களில் சேதமடைவதைத் தடுக்கவும், கட்டுபடுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது: பயிர்கள் சேதமடையாமல் பாதுகாக்கவும், மழைநீர் தேங்காமல் தண்ணீர் வெளியேற நிலங்களில் முறையான வடிகால் ஏற்படுத்த  வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க,  காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்தும், மரங்களை சுற்றி மண் அணைத்தும் பாதுகாக்க வேண்டும். 

காற்றினால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க குடிலைச் சுற்றி மற்றொரு வேலி (உயிர் வேலி) அமைக்க வேண்டும். மேலும், மா, கொய்யா மற்றும் மாதுளை பயிரிட்டுள்ள விவசாயிகள் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி கவாத்து செய்திட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அமைத்து, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட கிளைகளை அகற்றி, மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த  வேண்டும்.

தோட்டக்கலை பயிர் சாகுபடி விவசாயிகள்,  உரிய வழிமுறைகளுடன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் தகவல் மற்றும் உதவிகளுக்கு,  அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி பயன் பெறலாம்.இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News