தொடர் மழையால் சின்னசேலம் ஏரி நிரம்பியது - பொதுமக்கள் மகிழ்ச்சி
தொடர் மழையால் சின்னசேலம் ஏரி நிரம்பியது; இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நகரப்பகுதிக்கு உட்பட்ட அம்சாகுளம் ஏரி 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம், சுற்றியுள்ள 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு கல்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகும் மயூரா நதி மற்றும் கோமுகி அணையில் இருந்து கால்வாய்கள் மூலமும் தண்ணீர் வரத்து உள்ளது. முந்தைய ஆண்டுகளில் ஏரிக்கு தண்ணீர் வரத்து என்பது முற்றிலுமாக தடைபட்டு, செடி கொடிகளால் புதர் மண்டியிருந்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு தனியார் அமைப்புகள் எடுத்த முயற்சியால், கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வரத்து தொடங்கியது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால், பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல் சின்னசேலம் ஏரிக்கும் கோமுகி அணையில் இருந்து, சீரமைத்த கால்வாய்கள் மூலம் தண்ணீர் வரத்தால், கடந்தாண்டைப்போல், இந்தாண்டும் அதன் முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியே சென்றது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.