சாலை விபத்தில் தலைமைக்காவலர் படுகாயம்: பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதி
கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது, தாக்கா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.
இந்த சாலை விபத்தில் கால் முட்டி உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரோட்டிலேயே கிடந்தார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி.,க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் டி.எஸ்.பி., மணிமொழியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், தனிப் பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர்.