கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு மனைவி சித்ரா,36. இவர் தனது மகன் அஜித்,13; சுவாஸ்திகா,9; ஆகியோருடன் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் திடீரென அலுவலக நுழைவுவாயிலில் நின்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினார். உடன் அங்கிருந்த போலீசார் சித்ரா வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
போலீசாரின் விசாரணையில், சு.கள்ளிப்பாடியில் உள்ள எனது பாட்டனார் சொத்தை, கடந்த 25 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். எங்கள் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராமநாதன், நான் அனுபவிக்கும் இடத்தை அவரது பெயருக்கு பட்டா பெற்று விற்பனை செய்ய உள்ளார்.
இந்த இடத்தை காலி செய்ய மறுத்ததால் கடந்த 7 ம் தேதி அடியாட்களை வைத்து ஆயுதங்களால் எங்களை தாக்கினார். எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் தனது புகார் மனுவை அளித்தார்.