திண்டுக்கல்: கொரோனா நிவாரண டோக்கன் வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா நிவாரண டோக்கனை வீடுவீடாகச் சென்று வழங்கினர்.

Update: 2021-05-11 16:32 GMT

தமிழகத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கொரொனா நிவாரண தொகையாக ரூ.4000 இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி இந்த மாதமும், அடுத்த மாதமும்( ஜூன்) ரூ 2000 வழங்கப்படுகிறது .மேலும் இந்த நிவாரணத்தொகை வருகிற 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதோடு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக நேற்று மாநிலம் முழுவதும் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 6,48,739 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள 1,035 ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது .ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் குறைந்தபட்சம் 100 பேர் முதல் அதிகபட்சமாக 200 பேர் வரை நிவாரண தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினர். இதில் நிவாரண தொகை பெறுவதற்கு வர வேண்டிய நாள் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News