முறைகேட்டுக்கு வழிவகுக்கும் தற்காலிக ஆசிரியர் நியமனம்..! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அச்சம்
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அச்சத்துடன் கருத்து தெரிவித்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், தமிழக அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது எனவும், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.
மேலும் தற்காலிக ஆசிரியர் நியமன முறையில் தகுதியற்றவர்களையும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும் எனவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அச்சம் தெரிவித்தார். இதையடுத்து, மனு குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டு வழக்கை மறுநாளுக்கு அதாவது ஜூலை 1 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.