உத்தவ் அரசுக்கு ஆதரவு வாபஸ் நிலைப்பாடு: எம்.எல்.ஏ.,க்கள் நீதிமன்றத்தில் உறுதி

உத்தவ் அரசுக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறும் நிலைப்பாட்டில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளனர்.

Update: 2022-06-27 07:28 GMT

உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அணிதிரண்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி என கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. சிவசேனா தனது கொள்கைகளுக்கு முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை காப்பாற்ற பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்த்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சிவசேனா கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 55. ஆனால் தற்போது அதிருப்தி அணி வசம் மட்டுமே 38 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே வசம் வெறும் 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர். சட்டசபையில் தற்போதைய பலம் 287 (உயிரிழந்த ஒரு எம்.எல்.ஏ.வை தவிர்த்து) ஆக உள்ளது. இதனால் 106 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக திகழும் பா.ஜனதா சிவசேனா அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்ட்ரா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News