'அம்மா உணவகம்' தேர்தல் வாக்குறுதியில் காப்பியடித்த பாஜக

தமிழகத்தில் மிக குறைந்த விலையில் உணவு தரும் அம்மா உணவகம் போன்று, குஜராத்தில் 5 ரூபாய்க்கு உணவு தரும் அன்னபூர்ணா உணவகம் துவங்கப்படும் என, பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-27 08:14 GMT

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை போல, குஜராத் சட்டசபைத்  தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால் 5 ரூபாய்க்கு உணவு தரும் அன்னபூர்ணா உணவகங்களை 100 இடங்களில் திறப்பதாக தெரிவித்துள்ளது. ( கோப்பு படம்)

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குறுதியில், பாஜக ஆட்சிக்கு வந்தால், 5 ரூபாய்க்கு உணவு தரும் அன்னபூர்ணா உணவகம் உருவாக்கப்படும் என்று,  தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.

182 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட குஜராத்தில், டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 8 ம் தேதி நடக்க உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை கட்சிகள் பரபரப்பாக அறிவித்து வருகின்றன.

இதன்படி பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி 3 வேளையும் 5 ரூபாய்க்கு உணவு விநியோகம் செய்யும் வகையில், குஜராத் முழுவதும் 100 மையங்களில் 'அன்னபூர்ணா கேண்டீன்கள்' உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

பாஜக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பெண்களுக்கு இலவசக் கல்வி, 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு,

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராகக் கொண்டு செல்வது.

இரண்டு கடல் உணவுப் பூங்காக்கள், 20,000 அரசுப் பள்ளிகளை 'சிறப்புப் பள்ளி'களாக மாற்றுவது.

'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் ஆண்டு காப்பீட்டை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக இரட்டிப்பு செய்வது.

மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.

'வன்பந்து கல்யாண் யோஜனா 2.0' திட்டத்தின் கீழ், பழங்குடியினர் நலனுக்காக தலா எட்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பேட்டைகளுடன் அனைத்து வகையான சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்குவது ஆகியவை பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

'அம்மா உணவகம்' காப்பியடித்த பாஜக

கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபடும். அப்போது, நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதாக மட்டுமே, தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பது வழக்கமாக இருந்தது. எந்த அரசியல் கட்சிகளும் இலவச திட்டங்களை அறிவித்து, மக்களிடம் ஓட்டு கேட்கவில்லை.

ஆனால், இலவச டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, இலவச அரிசி, இலவச பஸ் பயணம் என, இலவசங்களை காட்டி, தமிழகத்தில் மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெறும் அவலம், இப்போது எல்லா மாநிலங்களிலும் பரவ துவங்கி விட்டது. தமிழகத்தில் அம்மா உணவகத்தில் மிக குறைந்த விலையில் இட்லி, வெரைட்டி சாத வகைகள் தந்ததை போல, குஜராத்தில், அன்னபூர்ணா உணவகங்களை 100 இடங்களில் ஏற்படுத்தி, தினமும் மூன்று வேளையும் ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இது, அப்பட்டமாக, அம்மா உணவகத்தை பின்பற்றும் ஒரு தேர்தல் வாக்குறுதியாக பாஜக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News