அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

Update: 2022-09-23 07:24 GMT

அசோக் கெலாட்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் ஆக இருப்பவர் அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மத்திய மந்திரி பதவி உள்பட பல்வேறு பதவிகளை வகித்து உள்ளார். ராஜஸ்தானில் கடந்த வாரம் இவரது தலைமையில் நடந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக முன்மொழிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து உரையாடி விட்டு வந்தார். அப்போது டெல்லியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ஏற்க தயாராக இருப்பதாகவும் அதற்காக போட்டியிடவும் தயாராக இருக்கிறேன் என கூறியிருந்தார்.  பின்னர் ஒற்றுமை பயணயாத்திரையில் உள்ள ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். மேலும் தற்போது உள்ள சூழலில் நாட்டில் காங்கிரஸ் பலமான எதிர்கட்சியாக இருந்தால்தான் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று கூறினார். செப்டம்பர் 26 அல்லது 27ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் வேட் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டால் சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு பின்னர் நேரு,இந்திரா காந்தி குடும்பத்திற்கு அப்பாற்பட்டு வெளியில் உள்ள நபர் ஒருவர் காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு ஏற்படும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதால் தான் வகித்து வரும் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை விரைவில் அசோக் கெலாட் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி தற்போது ஒற்றுமை யாத்திரை என்ற நடை பயணத்தில் இருக்கிறார் அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் இல்லை என உறுதியாக தெரிவித்ததை தொடர்ந்து அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News