'தமிழ் சினிமாவின் எதிர்காலம்' - சரத்குமாருடன் ரஜினிகாந்த் ஆலோசனை
Sarathkumar Meet Superstar Rajinikanth - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நேற்று சந்தித்தார். ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடிய அவர்கள், 'தமிழ் சினிமாவின் எதிர்கால திட்டங்கள்' குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
Sarathkumar Meet Superstar Rajinikanth- சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில், 'பெரிய பழுவேட்டரையர்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி, 'பொன்னியின் செல்வன்' படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் இதுவரை உலகளவில், 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனிடையே, 'பொன்னியின் செல்வன்' படத்தில், 'பெரிய பழுவேட்டரையர்' கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சரத்குமாரை, அப்படத்தை பார்த்த பின், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார், நடிகர் ரஜினிகாந்தை நேற்று, அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர்களது சந்திப்பு நீடித்துள்ளது. இதில், பல்வேறு விஷயங்கள் குறித்து, இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர். குறிப்பாக, தமிழ் சினிமாவின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், இருவரும் ஆழமாக பேசியதாக தெரிய வந்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக நடிகர் சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், அன்பு நண்பர் ரஜினிகாந்த் அவர்கள், பொன்னியின் செல்வன் படத்தில் "பெரிய பழுவேட்டரையர்" கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து, ஆத்மார்த்தமாக பாராட்டினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில், இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து, காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்' என, பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் , சரத்குமார் நடுவே, வரலட்சுமி இருக்கும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
கல்கி எழுதிய, 'பொன்னியின் செல்வன்' நாவலில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் ஒன்று பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம். இந்த கேரக்டரில், நடிக்க தனக்கு வாய்ப்பு தருமாறு, இயக்குனர் மணிரத்னத்திடம் ரஜினிகாந்த் கேட்ட போது, அந்த வாய்ப்பை தர அவர் மறுத்துவிட்டார் என, 'பொன்னியின் செல்வன்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில், மேடையில் பகிரங்கமாக சொன்னார் ரஜினிகாந்த். தான் நடிக்க விரும்பிய அந்த கேரக்டரில் நடித்த சரத்குமாரை, போனில் அழைத்து பாராட்டி இருக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்', சில தினங்களாக, விமர்சன நெருப்பில் அனல் பறந்து கொண்டிருப்பதும் குறிப்பிடதக்கது. கல்கி எழுதிய நாவலை படமாக்கிய மணிரத்னம், கல்கிக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும், படத்தில் சோழர்களின் புலிக்கொடி காட்டப்படவில்லை என்றும், ராஜ ராஜ சோழனை, இந்து மன்னனாக சித்தரித்தது தவறு என்றும் விமர்சன அம்புகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், தியேட்டர்களில், 'பொன்னியின் செல்வன்' மீது கரன்ஸி தாள்கள் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2