நயன்தாராவால் அஜித் பட வாய்ப்பை இழந்தாரா விக்னேஷ் சிவன்?
அஜித்துக்கும் விக்னேஷ்சிவனுக்கும் பிரச்னை ஏற்பட படத்திலிருந்து விக்னேஷை நீக்கிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.
அஜித்குமாரின் அடுத்த படத்தில் இயக்குநராக விக்னேஷ் சிவனைத் தேர்ந்தெடுத்திருந்தனர். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் தான் அடுத்த பட இயக்குநர் என அறிவிக்கப்பட்டார். அஜித் படங்களில் இதுவரை இல்லாத நடைமுறை இது. காரணம் ஒரு படம் முடித்த பிறகே அடுத்த படத்தை வெளியிடுவார்கள். ஆனால் முதல் முறையாக முதல் படம் முடிப்பதற்கு முன்னதாக அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டது லைகா.
ஆனால் அஜித்துக்கும் விக்னேஷ்சிவனுக்கும் பிரச்னை ஏற்பட படத்திலிருந்து விக்னேஷை நீக்கிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.
பல மாதங்களாக படத்துக்கு கதை தயார் செய்யாமல் இருந்தார், அஜித் கதையில் சொன்ன மாற்றத்தை ஏற்கவில்லை உட்பட பல விசயங்களை காரணமாக சொன்னார்கள். ஆனால் இப்போதுதான் தெரிகிறது எல்லாவற்றுக்கும் காரணம் நயன்தாராவின் பிடிவாதம்தான் என்பது.
நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் செட் ஆகாது என்பது தெரிந்த கதைதான். அஜித்குமார் திரிஷாவுக்கு நல்ல நண்பர். இப்போது உருவாகும் படத்தில் அஜித் ஜோடியாக திரிஷா நடிக்க வேண்டும் என அஜித்குமாரும் லைகாவும் யோசித்திருந்ததாம். ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம்.
நயன்தாரா தான் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் திரிஷா வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். லைகா தரப்பிலிருந்து காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய், கியாரா அத்வானி, பாலிவுட்டில் புதிதாக அறிமுகமாயிருக்கும் சில நடிகைகளின் பெயர்களையும் கூறினார்களாம். ஆனால் இவை எதற்குமே அசைந்து கொடுக்காத விக்னேஷ் சிவன், நயன்தாராதான் ஹீரோயின் என்று அடித்து சொல்லியிருக்கிறார்.
இதனை அஜித் காதில் போட்டு வைத்திருக்கிறது லைகா தரப்பு. அஜித்தும் தான் சொன்னால் கேட்பார் என தப்புக் கணக்கு போட்ட நயன்தாரா, அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீங்க கவல படாதீங்க என விக்னேஷ் சிவனை ஆறுதல் படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் போடுபவர்களை மதிக்க வேண்டும் என அஜித்குமார் லைகாவின் முடிவையே தனது முடிவு என்று கூறிவிட்டார்.
ஏற்கனவே பல காண்டில் இருந்த லைகா, அஜித் தங்களையே முடிவு எடுக்க சொல்லிய பிறகு காத்திருக்குமா, பறந்தது விக்னேஷ் சிவனுக்கு ஃபோன். இந்த முறை நீங்கள் படம் செய்யவேண்டாம் அட்வான்ஸை திருப்பிக் கொடுங்கள் என்று கூறிவிட்டனராம்.
இதனால் பதறிப்போன விக்னேஷ் சிவன், நயன்தாரா மூலம் அஜித்குமாரிடம் பேச எதுவும் வேலைக்கு ஆகவில்லையாம். லைகா தரப்பிடம் நேரடியாக பேசியும் வேலை எடுபடவில்லை என்பதால் இனி அஜித் படத்தில் நடிக்கமாட்டேன் என்று நயன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே அடுத்து இந்த படத்தை இயக்கும் மகிழ் திருமேனி தனது கதையில் திரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்க சம்மதித்திருக்கிறார் என்கிறார்கள். இப்போது லியோ படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அடுத்து அஜித் ஜோடியாகவும் திரிஷாவே நடிப்பார் என்று கூறப்படுகிறது.