மோகனூர் ரயில்வே பாலத்தின் அடியில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு
Namakkal news- மோகனூர் பகுதியில் கன மழை பெய்ததால் ரயில்வே பாலம் அடியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- மோகனூர் பகுதியில் கன மழை பெய்ததால் ரயில்வே பாலம் அடியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ள, சுப்ரமணியபுரம், இ.பி, காலனி ஆசிரியர் காலணி, நாமக்கல் ரோடு, காட்டு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர், அந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சாக்கடை கால்வாய் வழியாக பரமத்திவேலூர் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் செல்லும் தார் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக சென்று, வள்ளியம்மன் கோயில் அடுத்து செல்லும் வாய்க்காலில் கலக்கும். கடந்த சில நாட்களாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் தினசரி மாலை முதல் இரவு வரை கன மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்யும் பொழுது அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் மழை நீர் கலந்து, வெள்ளமாகப் பெருக்கெடுத்த, மோகனூரில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சாலை முழுவதும் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் குளம்போல் தேங்கி விடுகிறது. தண்ணீர் வடிவதற்கு நீண்டநேரம் பிடிப்பதால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக டூ வீலர் மற்றும் ஆட்டோக்களில் செல்பவர்களின் வாகனங்களில் தண்ணீர் புகுந்துவிடுவதால் வாகனங்கள் தண்ணீருக்குள் நின்றுவிடுகிறது. அதனால் அவர்கள் தண்ணீரில் நனைந்தவாறு மிகவும் சிரமப்பட்டு, வாகனங்களை மீட்டு வெளியே கொண்டுவருகின்றனர். இதனால் வாகனங்கள் பழுதாவதுடன், இரண்டு பக்கமும் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மழை பெய்யும் காலங்களில் இது போல் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால், நெடுஞ்சாலை மற்றும் டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து, ரயில்வே பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.