அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்!
![அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்! அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்!](https://www.nativenews.in/h-upload/2024/05/24/1907200-ecentre.webp)
பைல் படம் : நாமக்கல் மாவட்ட அரசுப் பளிகளின் இன்று இ-சேவை மையம் செயல்படும்
நாமக்கல் மாவட்ட அரசுப் பளிகளின் இன்று இ-சேவை மையம் செயல்படும்
நாமக்கல்,
பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான சான்றுகள் வழங்குவதற்காக, இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இ-சேவை மையம் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்கள் கல்வி பயிலும் பள்ளிகளிலேயே வருமான சான்று, இருப்பிடச் சான்று, சாதிச்சான்று மற்றும் முதல்பட்டதாரி சான்றுகளை விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (மே 24) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அந்தந்த பள்ளிகளிலேயே இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்படும். இதன்படி சேந்தமங்கலம் தாலுக்கா பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காவக்காரன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மோகனூர் தாலுக்கா என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பரமத்தி வேலூர் தாலுக்கா சோளசிராமணி அரசு மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் எஸ்எஸ் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்படும்.
மேலும், திருச்செங்கோடு தாலுக்கா சித்தாளந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் தாலுக்காவில் பள்ளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் இ-சேவை மையம் செயல்படும். இங்கு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க வரும்போது மாணவர்கள் செல்போனை உடன் எடுத்து வர வேண்டும். வருமானச்சான்றிதழ் பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமானத்திற்கான ஆதாரம் (ஏதேனும் இருந்தால்), சாதிச்சான்றிதழ் பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் சாதிச்சான்று அல்லது விண்ணப்பதாரர்களது மாற்றுச்சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.
இதுபோல் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, ரேசன் கார்டு கொண்டு வரவேண்டும். முதல்பட்டதாரி சான்று பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, ரேசன் கார்டு விண்ணப்பதாரின் ப்ளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களது கூட்டு உறுதி மொழி படிவம், பெற்றோர்களது சுய உறுதிமொழி படிவம், விண்ணப்பதாரர்கள் உடன் பிறந்தோரது பள்ளி அடையாள அட்டை (பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால்), உடன் பிறந்தோரது கல்லூரி போனஃபைட் சான்று (கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தால்) போன்றவற்றை முகாமிற்கு கொண்டு வரவேண்டும். மேலும், மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் அருகில் வசிக்கும் மாணவ, மாணவியர் இ-சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu