கோவையில் மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் - ஆட்சியர் அறிவிப்பு

கோவையில் மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் - ஆட்சியர் அறிவிப்பு
X

சாலையில் தேங்கிய வெள்ளநீர் 

கடந்த மூன்று நாட்களாக கோவை மாநகர பகுதிகளில் தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக கோவை மாநகர பகுதிகளில் தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இந்நிலையில் சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த பேருந்து வெளியே எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இதே பாலத்தில் தனியார் பேருந்து ஒன்று மாட்டிக் கொண்டது குறிப்பிடப்பட்டது.

இதேபோல நகரின் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. ரயில்வே பாலங்கள் அடியிலும் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் கோவையில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டும் இயங்கும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

Tags

Next Story