திருத்தணியில் நகைக்கடை கதவை உடைத்து பணம், தங்க நகைகள் கொள்ளை

திருத்தணியில் நகை கடையின் கதவை உடைத்து பணம், தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-08-31 06:15 GMT

கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடை முன்பு திரண்ட மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் இரண்டாவது ரயில்வே கேட் பகுதியில் நகை கடைகள் மற்றும் அடகு கடைகள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் என்.எஸ்.கே சாலையில் சண்முகம் என்பவர் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.

வழக்கம் போல் நேற்று கடையை திறந்து வியாபாரம் முடித்து மாலை 7 மணி அளவில் மழை பெய்த காரணத்தினால் மற்றும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் கடையை மூடிவிட்டு சண்முகம் வீட்டுக்கு சென்றார்.

சண்முகம் இன்று காலை கடை திறக்க வந்த போது,  கடை ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் நேற்று வியாபாரம் முடித்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த வியாபார பணம் 3.லட்சம், விற்பனைக்காக வைத்திருந்த புது டிசைன் உள்ள 33 சவரன் தங்க நகைகள் 10 கிலோ வெள்ளி பொருட்கள், ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் நகைக்கடையின் கதவை உடைத்து நகை பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடித்த சம்பவம் சக அடகு கடை வியாபாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த பகுதி மக்கள் வியாபாரிகள் தெரிவிக்கையில், இந்த பகுதியில் அருகில் ரயில் நிலையம் உள்ளதாகவும் 24 மணி நேரம் மக்கள் நடமாட்டம் இருக்கின்ற இப்பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், மேலும் இப்பகுதியில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிக்கு வருவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். எனவே இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News